தர்மபுரியிலிருந்து நாமக்கல் வரை செல்லும் 4 வழி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக தரம் உயர்த்திட வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி., ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.
மாநிலங்களவையில் ஜீரோ அவர்ஸ் நேரத்தில், திமுக எம்.பி. நாமக்கல் ராஜேஷ்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
தர்மபுரியில் இருந்து நாமக்கல் வரையிலான 119.5 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை (எண்44) பாதையை, 4 வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையாக மேம்படுத்துவது மிகவும் கட்டாயமாகும்.
அந்த திட்டம் தற்போது விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) கட்டத்தில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை தமிழகத்தின் தொழில்துறை மற்றும் விவசாய மையங்களை இணைக்கிறது, பெங்களூரு மற்றும் கன்னியாகுமரி இடையே சரக்குகள் மற்றும் பயனிகளின் போக்குவரத்தை எளிதாக்குகிறது.
மேலும், இந்த தேசிய நெடுஞ்சாலை, சேலத்திற்கும் நாமக்கல்லுக்கும் இடையே உள்ள பகுதி புதுச்சத்திரம் பஞ்சாயத்து வழியாக செல்கிறது. இந்த பகுதி அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.
இப்பகுதியில் பல தொழில்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இப்பகுதி மக்கள் அடிக்கடி புதுச்சத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்துசெல்லவேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே, விபத்து அபாயத்தைக் குறைப்பதற்கும், அதிக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் புதுச்சத்திரத்தில் மேம்பாலம் அமைப்பது அவசியம். எனவே, இதை டிபிஆரில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப்பணிகளை துவக்க வேண்டும். இந்த பிராந்தியத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.