10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 25ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில், முழுமையாக கலந்துகொள்வது என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், ஒருங்கிணைந்த வட்டார நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கதிரேசன் வரவேற்றார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சங்கர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், நிதி மோசடித்திட்டமான புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை நிராகரித்து விட்டு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, தேர்தல் அறிக்கை உறுதிமொழியின் படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை, 2003 ஏப்ரல் 1 முதல் தொடர வேண்டும்.
மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான சம்பளத்தை தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2006 ஜூன் 1 முதல் வழங்க வேண்டும்.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு, மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மூலம் வருகிற 25ம் தேதி நாமக்கல்லில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் முழுமையாக அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.