Close
ஜூன் 6, 2025 2:40 மணி

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதை விற்பனை லைசென்ஸ்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதைகள் விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம், நாமக்கல் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் சேலம், அயோத்தியாப்பட்டினம், ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர் மற்றும் தலைவாசல் வட்டாரங்களில் உள்ள 212 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விதை விற்பனை லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், புதுச்சத்திரம், எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமகிரிபேட்டை, வெண்ணந்தூர், ராசிபுரம், மோகனூர், திருச்செங்கோடு, பரமத்தி, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், கபிலர்மலை மற்றும் பள்ளிபாளையம் வட்டாரங்களில் 164 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விதை விற்பனை லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 1,393 விதை விற்பனை நிறுவனங்களுக்கு விதை விற்பனை லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மக்காச்சோளம் பயறுவகைப் பயிர் விதைகள், எண்ணெய்வித்து மற்றும் காய்கறிப்பயிர் விதைகளை வாங்கி வயல்களில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்பொழுது, விதைக்குரிய பட்டியலை கண்டிப்பாக வழங்க வேண்டும்.

தரமான நல்ல முளைப்புத்திறன் உடைய காலவதி நாளுடன் கூடிய சான்று பெற்ற விதைகளையே விற்பனை செய்யவேண்டும். உண்மை நிலை விதையாக இருப்பின் கண்டிப்பாக பதிவு சான்று பெற்றிருக்கவேண்டும்.
விதை விற்பனை லைசன்ஸ், இருப்பு பதிவேடு, விதைகொள்முதல் ஆவணம் மற்றும் இதர விதை விற்பனை ஆவணங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top