மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை , மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழக அரசின் உத்தரவின்படி, கோடை விடுமுறைக்கு பின் 2025-26 ஆம் கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மதுரை மாநகராட்சியின் சார்பில் 40 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எல்,கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு பயிலும் 1625 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்.
மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 218 மாணவ, மாணவிகளுக்கும், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் 950 மாணவ, மாணவிகளுக்கும், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 1200 மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள், நோட்டுக்கள் மற்றும் பாடப்புத்தகங்களை, மேயர் வழங்கினார்
விழாவில் மேயர் கூறியதாவது: தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி கற்பதுடன் வாசித்தல் மற்றும் எழுதுதல் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி மட்டுமே ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவே கல்வியை ஆர்வத்துடன் மாணவ, மாணவிகள் கற்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து, சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடத்தையும், கோரிப்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும், சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கண்காணிப்பாளர்கள் ரமேஷ், வீரபாலமுருகன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சண்முகத்திருக்குமரன், மாமன்ற உறுப்பினர்கள் பாண்டீஸ்வரி, வசந்தாதேவி, ஜென்னியம்மாள், உமா, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்விபிரிவு பணியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.