அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில், 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், திருவண்ணாமலையில் தேரோடும் மாடவீதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, முதற்கட்டமாக ரூ.17 கோடியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது 2024- 25ம் நிதியாண்டில் 2ம் கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் காந்தி சிலை முதல் திருவூடல் தெரு சந்திப்பு வரையிலான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சாலையை அமைக்க விமான ஓடுதளம் அமைக்க பயன்படுத்தப்படும் பவர் பேவர் என்ற இயந்திரம் மூலம் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவு பெறும். தேரோடும் வீதி லட்சக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்தும் மாடவீதி என்பதால் தனிகவனம் செலுத்தி சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.
அதனைத் தொடர்ந்து தார் சாலைகளை 24 மணி நேரத்தில் அமைத்து விடலாம், அதே நேரத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஈரப்பதம் முக்கியம் என்றும், அதனால் அருகருகே பாத்தி கட்டி தண்ணீரை தேக்கி போடப்பட்ட சிமெண்ட் சாலை முழுவதும் ஈரப்பதத்துடன் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .
அதேபோல் தேரடி வீதியில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் பஞ்ச மூர்த்திகள் அமர்ந்து வீதி உலா வரக்கூடிய திருத்தேர்கள் உள்ள இடங்களின் கீழ் பகுதியிலும் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தமிழக நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ், தொழில்நுட்ப சிறப்பு அலுவலா் சந்திரசேகா், நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் சரவணன், கோட்டப் பொறியாளா் ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.