நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஒரே கல்லில் உருவான சாளக்கிராம மலையின் மேல் பகுதியில், மலை வரதராஜ பெருமாள் கோவிலும், கிழக்குப் பகுதியில், அரங்க நாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் குடவறைக் கோயிலும் உள்ளது.
இம்மலையின் மேற்குப் பகுதியில், நாமகிரித் தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும், வைகாசி விசாக நட்சத்திரத்தன்று நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெறும்.
இந்த ஆண்டு நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை, 10 மணி முதல், மாலை, 6 மணி வரை, நரசிம்மர் சுவாமி சன்னதி நடை அடைக்கப்பட்டது. கோயில் பட்டாச்சாரியார்கள் மூலவர் நரசிம்மர் சிலை மீது நல்லெண்ணெய், பச்சைக் கற்பூரம், மூலிகைகள் உள்ளிட்டவற்றை கலந்து தைலமாக தயார் செய்து சுவாமி மீது சாத்துப்படி செய்தனர்.
இவ்வாறு சாத்துப்படி செய்யும்போது, அந்த தைலத்தால் சிலையின் மீதுள்ள கழிவுகள் அகன்று விடும். மாலை 5:30 மணிக்கு, நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு, நடை திறக்கப்பட்டது.
நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.