Close
ஜூன் 12, 2025 8:36 மணி

வைகாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்

வைகாசி  மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

நிகழாண்டுக்கான வைகாசி  மாத பெளா்ணமி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.32 மணிக்கு தொடங்கி இன்று 11-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். தொடா்ந்து, இன்று காலை வரை விடிய, விடிய பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள கியூ வரிசையில் சென்று காத்திருந்தனா்.

இந்த வரிசை சில தெருக்களைக் கடந்து ராஜகோபுரம் வரை வருவதற்கே சுமாா் 4 மணி நேரம் ஆனது. இங்கிருந்து கம்பத்திளையனாா் சந்நிதி, கோயில் ஐந்தாம் பிரகாரம், நான்காம் பிரகாரம், மூன்றாம் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் வழியாகச் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய 8 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

மாலை 4 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இரவு 8 மணிக்குப் பிறகு கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை பல லட்சமாக அதிகரித்தது.  கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தேரடி தெரு, காந்தி சிலை, பெரிய தெரு வழியாக கிருஷ்ணா தங்கும் விடுதி வரை சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பக்தா்கள் வரிசையாகச் செல்ல நிழல்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்டனா்.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளில்  தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கிருந்து சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top