நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 1,005 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ரூ. 7.02 கோடி மதிப்பில் பைசல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம், நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி ஏற்பாட்டில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடைபெற்றது.
இந்த லோக் அதாலத்தில் வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துகொள்ள வழிவகை செய்யபட்டது. நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் முதலாவது அமர்வில், நீதிபதிகள் பிரபாசந்திரன், விஜயகுமார், ரூபனா, இரண்டாவது அமர்வில், நீதிபதிகள் சாந்தி, சச்சிதானந்தம், தங்கமணி ஆகியோர் வழக்குகளை விசாரணை நடத்தினர்.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தை சார்பு நிதிபதி வேலுமயில் மேற்பார்வையிட்டார். விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை, குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய நீதிமன்றங்களில் நடந்த லோக் அதாலத்தில், 3,131 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,005 வழக்குகளுக்கு, ரூ. 7 கோடியே, 2 லட்சத்து, 20 ஆயிரத்து 206 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.