Close
ஜூன் 17, 2025 4:58 மணி

அரசு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை

நாமக்கல்லில் நடைபெற்ற உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் உமா பேசினார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர முடியாத நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கான, சிறப்பு குறைதீர் முகாம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை, அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்களுக்காக உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி, 3 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 2023-24, 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் அனைவரையும், உயர்கல்விக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில், ஆட்சியர் தலைமையில், கல்லூரி கனவு, உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004251997, வாட்ஸ்அப் எண்: 9788858794) சிறப்பு குறைதீர் முகாம் என, பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்கள் மூலம், மாதம்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவ மாணவிகள் தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என அவர் கூறினார்.

சிஇஓ மகேஸ்வரி, கலால் உதவி கமிஷனர் ராஜேஸ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top