நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு பள்ளிபாளையம் பகுதியில் 9,920 ஏக்கரிலும், சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி வட்டாரத்தில் 5,425 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி பரவலாக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின்படி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் தாலுகா எலந்தகுட்டை மற்றும் கலியனூர் அக்ரஹாரத்தில் 23.1.2025 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது.
எருமப்பட்டி வட்டாரத்தில் கோணங்கிப்பட்டி கிராமத்தில் 10.02.2025 முதல் நேரடி நெல் கொள்முதல் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 246 விவசாயிகளிடமிருந்து 1,185.360 மெ.டன் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சன்னரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.24.50 மற்றும் பொது ரகம் நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.24.05 வீதம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. சன்னரகம் 1117.960 மெ.டன் மற்றும் பொது ரகம் 67.400 மெ.டன் ஆக மொத்தம் 1,185.360 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குண்டான தொகை ரூ. 2,90,10,990 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.