Close
மார்ச் 7, 2026 1:32 மணி

வாடகை பிரச்சினை சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: கூட்ஸ் ரயில்களில் சரக்குகள் தேக்கம்

வாடகை பிரச்சினை சம்பந்தமாக நாமக்கல் ரயில் நிலைய கூட்ஸ் ஷெட்டில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களில் கொண்டுவரப்பட்ட மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் இருந்த இறக்க முடியாமல் தேங்கியுள்ளது.

நாமக்கல்லுக்கு ஒடிஷா, பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம், அரிசி, கோதுமை, தவிடு மற்றும் புண்ணாக்கு போன்றவை கோழித்தீவன ஆலைகளுக்காக சரக்கு ரயில்களில் கொண்டுவரப்படுகின்றன. அவை ரயில் நிலையத்தில் இருந்து தேவைப்படும் இடங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்கு குறிப்பிட்ட தொகையை சரக்கு லாரிகளுக்கு வாடகையாக கூட்ஷெட் காண்ட்ராக்டர்கள் வழங்குகின்றனர். இந்தநிலையில் இந்த வாடகை தொகை டன் ஒன்றுக்கு ரூ. 10 வீதம் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நாமக்கல் ரயில் நிலைய கூட்ஸ் ஷெட்டில் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து லாரி உரிமையாளர்களிடம் போலீசார் முன்னிலையில் காண்ட்ராக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாடகையை பழையபடி வழங்கினால் மட்டுமே சரக்குகளை லாரிகளில் எடுத்துச் செல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படாமல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லாரி ஸ்டிரைக்கால், வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களில் கொண்டுவரப்பட்ட மக்காச்சோளம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் லாரிகளில் இருந்து இறக்க முடியாமல் தேங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top