Close
மார்ச் 7, 2026 2:34 மணி

தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டுகோள்

நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரவிச்சந்திரன்,

நாமக்கல் பகுதியில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து, முறையாக மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் பகுதி லாரித்தொழில் நிறைந்த பகுதியாகும். லாரி தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்து பல்வேறு சிறு,குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் நாமக்கல் பகுதியின் முக்கிய வாழ்வாதாரங்களில் லாரி தொழில் குறிப்பிடத்தக்கதாகும். பிற மாவட்டங்களை சேர்ந்த லாரிகள் பல்வேறு பணிகளுக்காக நாமக்கல் நகருக்கு வருகின்றன. லாரி தொழிலின் முக்கிய அங்கமாக விளங்கும் டயர் ரீட்ரேடிங் தொழில் தமிழகத்திலேயே அதிக அளவில் நாமக்கல்லில் உள்ளது.

பல்வேறு இடர்பாடுகளால் இந்த தொழில் நலிவடைந்து வரும் நிலையில், நாமக்கல்லில் மின்வாரிய அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் மாதாந்திர பராமரிப்புக்காக மின்சார நிறுத்தம் அறிவிப்பு கொடுத்து, மின் நிறுத்தத்திற்கு முதல்நாள் இரவில் அதை ரத்து செய்கின்றனர். பல முறை இவ்வாறு நடந்துள்ளது.

இதனால் டயர் ரீட்ரெடிங், பாடி பில்டிங், வெல்டிங் லேத் உள்ளிட்ட பட்டறை நிறுவனங்கள் மின்சாரம் இருக்காது என தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துவிடுவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதனால் லாரித்தொழில் சார்ந்த பட்டறை உரிமையாளர்களும், தொழிலாளர்களும், லாரி உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மின்சார வாரியம், மாதாந்திர மின்சார நிறுத்தம் அறிவிப்பை முன்கூட்டியே தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து முறையாக அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top