மூத்த குடிமக்கள் நலனுக்காக தமிக அரசின் சார்பில் தனியாக மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மொபைல் ஆப் மற்றும் தனியான வெப்சைட் https://seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது.
செல்போனில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம், இந்த அப்ளிகேஷனை தங்களின் செல்போனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்களின் குறைகளை தெரிவிக்கவும் மூத்த குடிமக்கள் செல்போன் அப்ளிகேஷனில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் தங்களது செல்போனில், இந்த செல்போன் அப்ளிகேஷனை (சீனியர் சிட்டிசன் அப்ளிகேஷன்) டவுன்லோடு செய்து பயனடையலாம். மேலும், மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




