விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வருகிற 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது::
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற வசதியாக அனைத்து விவரங்களையும் எலக்ட்ரானிக் முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் (அக்ரி ஸ்டேக்) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் நம்பர், செல்போன் நம்பர், நில உடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், விவசாயிகள் பொது சேவை மையம் சென்று அங்கும் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
2025-&26ஆம் நிதி ஆண்டிற்கான முதல் தவணை தொகை நில உடைமை விவரங்கள் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே பிரதமரின் கவுரவ நிதித் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படும். எனவே தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் விவசாயிகளுக்கு அவசியம்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 1,16,181 விவசாயிகளில் தற்போது 87,452 விவசாயிகள் மட்டுமே அக்ரிஸ்டேக் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். எனவே, மீதமுள்ள விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை- உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், செல்போன் எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி வருகிற 30ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறவேண்டும்.
மேலும் வரும் நிதியாண்டு முதல் பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டம், பயிர்காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசு திட்டத்தில் விவசாயிகள் எளிதில் பயன்பெற மேற்கண்ட தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியமாகிறது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.




