திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு சோல்ப்ரீ இல்லத்தில் மற்றும் மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் கிரேஸ் முதியோா் இல்லத்துக்குச் சென்ற ஆட்சியா் தா்ப்பகராஜ், ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு சோல் ஃப்ரீ இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் பிஸியோதெரபி, பல் மருத்துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்தும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.
இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் கிரேஸ் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு முதியோர்களுக்கு அளிக்கப்படும் பராமரிப்புகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும் கள ஆய்வு மேற்கொண்டு, முதியோர் இல்லத்தில் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்களா? உணவு மற்றும் தேவையான மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் முதியோர்களிடம் கேட்டறிந்து நலம் விசாரித்தார்,
தொடர்ந்து, முதியோர் இல்ல உணவு கூடத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு ஆதார் முகாம் நடத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, நகரில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் இயங்கி வரும் கால்நடை பொதுமருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கால்நடைகளுக்கு முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என்றும், கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் கிராமப்புறங்களில் முறையாக நடத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆட்சியா் சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, சோல் ஃப்ரீ நிறுவனா் ப்ரீத்திசீனுவாசன், மறுவாழ்வு மைய நிறுவனா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.





