நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இந்தியாவில் 1975ம் ஆண்டும், எமர்ஜென்சி என்ற அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 50 ஆண்டு இருண்ட நினைவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
மாநாட்டில் காட்டப்பட்ட பழைய வீடியோவை வைத்துக் கொண்டு எதிர்கட்சியினர் அரசியல் செய்தனர். கையில் அரசியல் சாசன சட்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டு பாஜக அரசியல் சாசனத்திற்கு எதிராக நடப்பதாக ராகுல்காந்தி சொல்லிக் கொண்டுள்ளார்.
ஆனால், அவர்களது பாட்டி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு அரசியல் சாசனத்தை முழுமையாக முடக்க வைத்துவிட்டு எமர்ஜென்சி என்ற அவசரநிலை பிரகடனத்தை ஏற்படுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தினார்கள்.
இப்போது அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணியை வைத்துள்ளது. அரசியல் சாசனத்தை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை கிடையாது. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்த கட்சி காங்கிரஸ். அப்படிபட்ட கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.
மேலும், திமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய ராமலிங்கம், அதில் ராமன் விபீஷனனிடம் கூறிய வாக்கே பொய்யாகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை எம்மாத்திரம் என்றார்
கடவுள் பெயரை பாஜக மிஸ் யூஸ் பண்ணுவதாக முதல்வர் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, கடவுள் இல்லை என கூறுபவர்கள் கடவுள் பெயரை மிஸ் யூஸ் செய்கிறார்கள் என எப்படி கூறுகின்றனர். அப்படியெனில் கடவுள் இருக்கிறார் என அர்த்தம். எனவே கடவுள் உள்ளாரா இல்லையா என்பதை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவியிடம் கேட்டு தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்
அதிமுகவை அழிக்கும் அளவிற்கு பாஜகவிற்கு சக்தி உள்ளது என திருமாவளவன் கூறுகிறார் என்றால் பாஜக வலிமையான கட்சி என பொருள். எனவே வலிமையான கட்சியான பாஜகவுடன், திருமாவளவன் கூட்டணி சேர வேண்டும். திருமாவளவன் நெற்றியில் இருந்து திருநீறை அழித்ததை அரசியலாக்க வேண்டாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றார்.




