நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கேயில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிவடைந்தது. இந்த நிலையில், 2025-2027 ஆம் ஆண்டுக்கு மீண்டும் ஏற்கனவே இருந்தவர்களையே அறங்காவலர்களாக நியமித்து, தமிழக இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதையொட்டி ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அறங்காவலர்களை வாழ்த்தி பேசினார்.
அறங்காவலர் குழு தலைவராக தென்பாண்டியன் நல்லுசாமி மற்றும் உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, செல்வசீராளன், ராம சீனிவாசன், டாக்டர் மல்லிகா ஆகியோர் பொறுப்பேற்றனர். மாநகராட்சி மேயர் கலாநிதி, நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல், ஈரோடு அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, கோயில் உதவி கமிஷனர் இளையராஜா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.




