மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ள கரும்பை, ஆலையில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, 2024-25ம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள கரும்பு கிரையத் தொகை டன் ஒன்றுக்கு, ரூ. 3,151 நிலுவையின்றி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.
2024-25ம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு, ஆலைக்கு கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு, மாநில அரசு, வழங்கும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக, டன் ஒன்றுக்கு ரூ. 349 வீதம், நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மேலும், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பருவத்திற்கு, குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து, கரும்பு கிரையத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வீதம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்குவது மட்டுமின்றி, கரும்பு உற்பத்தி பரப்பை அதிகரிக்க, கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலை மூலம் புதிய ரக கரும்பு நடவு செய்ய, 50 சதவீதம் மானியத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மூலம், அறிமுகப்படுத்தியுள்ளன.
2025-26ஆம் ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில், கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்திட மானியத் திட்டங்களான சொட்டு நீர் பாசனம் அமைத்து, 4.5 அடி அகலப்பாரில் பருசீவல் நாற்றுகள், ஒரு பரு கரணை நடவு, அகலப்பார் நடவு முறை சோகை பரப்புதல், சோகை தூளாக்குதல் ஆகியவற்றிற்கு, விவசாயிகளுக்கு ஆலை மூலம் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மானிய விலையில் உயிர் உரங்கள், ஆலையில் தயாரிக்கப்படும் பயோ கம்போஸ்ட் இயற்கை உரம் வழங்கப்பட்டு வருகிறது.
2025-26ம் அரவைப்பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாய அங்கத்தினர்கள் அனைவரும் பதிவு செய்யாமல் உள்ள நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை, ஆலையில் பதிவு செய்து அனைத்து மானிய பலன்களையும் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




