ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
\தினசரி மக்கள் கூடும் ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் வழங்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட காகிதங்கள், பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
பெட்டி கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் கூட வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்ற உணவை, அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயலானது சுகாதாரமற்றதாகும்.
உணவுப் பொருளுடன் அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மை மிகவும் தீவிரமான உடல் பாதிப்பையும் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மையில் உள்ள கனிம வேதிபொருள்களான அரைல் அமீன்கள் நுரையீரல் மற்றும் சிறுநீர் பை கேன்சரை உருவாக்கும்.
வண்ணங்கள், தடிமனான எழுத்துக்கள் உருவாக்க மற்றும் விரைவாக உலர்த்த பெட்ரோலிய மினரல் ஆயில், மெத்தனால், பென்ஸீன், டொலியீன், கோபால்ட் போன்ற வேதி பொருட்கள் செய்தி அச்சு பிரிண்ட் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
எனவே அனைத்து உணவு பொருள் விற்பனை நிறுவனங்களிலும், அச்சிடப்பட்ட காகிதங்கள் (செய்தித்தாள். மையினால் எழுதிய வெள்ளை காகிதம்,பழுப்பு காகிதம்) மற்றும் அது தொடர்பான பொருட்களைக் கொண்டு பேக்கிங் செய்யவோ, உண்பதற்கு வழங்கவோ கூடாது.
அவ்வாறு வழங்கப்படும் உணவுப்பொருட்களை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம். சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவு கடைகள், சில்லி கடைகள் மற்றும் சமையல் கேட்டரிங் சர்விஸ் உட்பட அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் தரச் சட்டத்தின் படி உணவு பாதுகாப்பு லைசென்ஸ் அல்லது பதிவு சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இது குறித்து புகார்கள் ஏதும் இருப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் வாட்ஸப் புகார் எண்.9444042322 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.




