நாமக்கல் மாவட்டத்தில், திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம், மக்களை நேரடியாக சந்தித்து 45 நாட்களில் 6 லட்சம் திமுக உறுப்பினர்களை சேர்க்க உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில், செய்தியாளர்கள் சந்திப்பு நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும் காத்திடும் வகையில் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.
இதையொட்டி இன்று 2ம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல் பார்க் ரோட்டிலும், மேற்கு மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் ஓரணியில் தமிழ்நாடு இயக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
நாளை 3ம் தேதி முதல் நாமக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிள் மற்றும் திமுக டிஜிட்டல் ஏஜெண்டுகள், பூத் ஏஜெண்டுகள், திமுக செயல்வீரர்கள் உள்ளிட்டோர் நகரம், கிராமம் வாரியாக வீடு வீடாச்க சென்று தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறுவார்கள்.
மேலும், மத்திய அரசின் மூலம் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் ஏற்பட்டு வரும் இன்னல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூற உள்ளனர். அப்போது விருப்பமுள்ளவர்களை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம், திமுகவில் உறுப்பினர்களாக இணைக்கும் பணியினை அவர்கள் மேற்கொள்வார்கள்.
தொடர்ந்து ஆக. 11ம் தேதி வரை நடைபெறம் இந்த இயக்கத்தில், நமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும், திமுகவிற்கு 6 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என அவர் கூறினார்.




