நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் துர்காமூர்த்தி திடீர் விசிட் செய்து பார்வையிட்டார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகில் ரூ. 92.31 கோடி மதிப்பீட்டில் அரசு சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடத்தினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். அந்த கட்டிடத்தினை ஆட்சியர் துர்கா மூர்த்தி பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடித்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை ருசித்து பார்த்து, உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் விபரம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிக்சைகள், மருந்து பொருட்களின் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்து, சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்க அலுவலர்களை வலியுறுத்தினார்.
தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தை ஆட்சியர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்துகளின் வருகை விபரம், பயணிகளுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தூய்மைப் பணியாளர்களிடம் சுற்றுப்புறம் மற்றும் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும் என கூறினார்.




