மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன . இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நமது மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூகதரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.
கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூகசேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் முன் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கணக்கெடுப்புப் பணி ஜூலை 10-ஆம் தேதி துவங்கி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்புப் பணி சிறப்பாக நடைபெற உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.




