Close
மார்ச் 7, 2026 2:38 மணி

மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதால் சுகாதாதார சீர்கேடு: கிராம மக்கள் புகார்

லத்துவாடி கிராமத்தில், மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதை தடை செய்யக்கோரி மக்கள் நல கூட்டமைப்பினர், மாநகராட்சி செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் அருகே லத்துவாடி கிராமத்திற்கு உட்பட்ட வடக்கால் புதூரில் நாமக்கல் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தல் புகார் மனு அளித்துள்ளனர்.

நாமக்கல், மோனூர் ரோட்டில் உள்ள லத்துவாடி கிராமம் உள்ளது. தற்போது அந்த கிராமம் மாநகராட்சி எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. லத்துவடிக்கு அருகில் உள்ள வடக்கால் புதூரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இச்சூழலில் அங்கு நாமக்கல் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக கிராம மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். இது குறித்து லத்துவாடி கிராம விவசாயிகள் மற்றும் மக்கள் நல கூட்டமைப்பினர், நாமக்கல் மாநகராட்சியில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் கூறியுள்ளதாவது: லத்துவாடி கிராமத்திற்குட்பட்ட வடக்கால் புதூரில் நாமக்கல் மாநகராட்சி மூலம் நாள்தோறும் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் குப்பைகள் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

குப்பையால் நிலத்தடி நீரும் மாசடைகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. விவசாய நிலம் மாசுப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே வடக்கால்புதூரில் மாநகராட்சி குப்பை கொட்டப்படுவதை கைவிட வேண்டும், இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top