அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, அதிமுக சார்பில் இபிஎஸ் ஆட்சி அமைப்பார் என, அதிமுக, பாஜ ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் விளக்கம் அளித்தார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட அதிமுக மற்றும் பாஜ நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். பாஜ மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், அதிமுக மகளிரணி அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, ப.வேலூர் எம்எல்ஏ சேகர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் லட்சக்கணக்கான மக்கள் வரவேற்புடன், மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை பார்த்தால், 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக பாஜ கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேர்தலுக்காக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் நலனைப் பற்றி ஆளும் திமுக அரசு கவலைப்படவில்லை. இனி, எந்த சந்திப்பு நடத்தினாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
அதிமுக பொதுச் செயலாளரின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கிடைக்கும் வரவேற்பு, பாஜ கூட்டணி ஆகியவற்றை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் முதல்வர் ஸ்டாலின், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறார் என தங்கமணி கூறினார்.
தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக தலைமையில்தான் 2026 சட்டப்பேரவை தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கும் என்று ஏற்கனவே பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெற்று, இபிஎஸ் ஆட்சி அமைப்பார் என்பதை அவர் தெளிவாக கூறியிருந்தார்.
அவரது இந்தி பேச்சு புரியாதவர்கள், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக பல கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில், தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்தையும் இபிஎஸ்தான் முடிவு செய்வார், அதனால் வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
மேலும் பல கட்சிகள் அதிமுக, பாஜ கூட்டணிக்கு வர உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எனது நண்பர், அவரை நேரில் சந்தித்து பேச உள்ளேன். தலித் சமுதாயத்தின் அறிவுசார் தலைவராக உள்ள அவரை பின்பற்றுகிற இளைஞர்கள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது என்பதை ஒரு நண்பர் என்ற முறையில் அவருக்கு எடுத்துக்கூறி, பல்வேறு விவகாரங்களை நான் பேச உள்ளேன்.
திமுக உடன் அவர் இருந்தால் தலித் சமுதாயத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்று அவருக்கு தெரிந்தும், வேறு வழியில்லாமல்தான், அந்தக் கூட்டணியில் உள்ளார். திமுக இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறது. எந்த கட்சியும் தலித் சமுதாய மக்களுக்கு உரிமைகள், வாய்ப்புகள் வசதிகள், அமைச்சரவையில் இடமும் வழங்காத நிலையில் பாஜக தலித் சமுதாய மக்களுக்கு முக்கிய மத்திய அமைச்சர் பதவிகள் உள்ள பல்வேறு வாய்ப்புகளை வழங்கி உள்ளது.
பாமக ஏற்கனவே பாஜக கூட்டணியில்தான் உள்ளது என்பதை அந்த கட்சியின் தலைமை தெரிவித்துவிட்டது. இதுகுறித்து பாஜக எந்த அழுத்தமும் தரவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக உழைக்கின்ற இயக்கங்களாக அதிமுகவும் பாமகவும், இரட்டை குழல் துப்பாக்கிகளாக திகழ்கின்றன. வன்னிய சமுதாய மக்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கியது அதிமுக அரசுதான். ஆக வன்னியர் சமுதாயத்திற்கு மிகப்பெறிய நன்மை செய்த தலைவர் இபிஎஸ்தான் என டாக்டர் ராமலிங்கம் கூறினார்.




