திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான மருத்துவம் அனைவருக்கும் இலவசம் என கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார் .
திருவண்ணாமலையில் உள்ள தூய்மை அருணை அமைப்பு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள அருணை மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார். அருணை கல்விக் குழும துணைத் தலைவர் எ.வ.குமரன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை அருணைமேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே. கம்பன் அனைவரையும் வரவேற்றார். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தி அறுசுவையுடன் கூடிய சீர்வரிசை பெட்டகத்தை வழங்கி கர்ப்பிணி தாய்மார்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது .
திருவண்ணாமலை மாநகரை தூய்மையாக வைத்துக்கொள்ள தூய்மை அருணை இயக்கம் தொடங்கப்பட்டு நகரின் அனைத்து இடங்களிலும் உள்ள கால்வாய்களை தூர்வாருதல், அனைத்து சாலைகளையும் பசுமையாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நட்டு அதனை பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து தூய்மை அருணை இயக்கம் செய்து வருகிறது. தொடர்ந்து பெண்களுக்கு நல உதவிகள் செய்ய வேண்டும் என கருத்தில் கொண்டு அருணை மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரனை அணுகி கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்பொழுது தூய்மை அருணை மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி இணைந்து மகளிருக்கு வளைகாப்பு நடத்தும் விழா என்ற புதிய திட்டத்தை துவக்கி உள்ளதாகவும், இந்த விழா மாதந்தோறும் நடைபெறும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சங்க இலக்கிய நூல்களில் கர்ப்பிணி பெண்கள் குறித்தும், பெண் கர்ப்பம் குறித்து குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர் தமிழ்நாடு முதல்வர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவே பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி பெண்களுக்காக பல்வேறு விழாக்களை திராவிட மாடல் அரசு எடுத்து வருவதை சுட்டிக்காட்டி பேசினார். தமிழ்நாடு முதல்வர் மகளிர் மீது வைத்திருக்கும் அன்பு பாசம் நல்ல நோக்கத்தினால் மட்டுமே இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் பணம் முக்கியம் அல்ல என்பதை அவர் கருத்தில் கொண்டுதான் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழக அரசால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ. 18 ஆயிரம் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை தூய்மை அருணையில் 1000க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து மாநகரை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் ஆடை அணிந்து ஏழை பணக்காரன், பெரியவர் சிறியவர் என எந்த ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள மகளிர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டால் அவர்களுக்கு பிரசவம் இலவசம். குறிப்பாக அருணை மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவம் , அறுவை சிகிச்சை குழந்தை வைத்தியம், எக்ஸ்ரே, இசிஜி, எலும்பு முறிவு, காது மூக்கு, தொண்டை, தோல் சுவாச பிரச்சனை, மனநலம் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவத்திற்கும் இனி திருவண்ணாமலை மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதே போன்று சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி என்று கூறக்கூடிய மருத்துவத்திற்கு குறைந்த கட்டணம் வழங்கி மருத்துவம் செய்யப்படும். தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு வீடாகச் சென்று அருணை மருத்துவமனை குறித்து விளம்பர நோட்டீசுகளை வழங்கி பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை மக்களின் நன்மைக்காகவும் நலத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறிய அவர் இனி ஒவ்வொரு மாதமும் 16ஆம் தேதி மகளிருக்காக வளைகாப்பு விழா வெவ்வேறு சிறப்பு விருந்தினர்களை கொண்டு நடத்தப்படும் என தெரிவித்தார் .
இந்த விழாவில் மேற்பார்வையாளர்கள் இரா. ஸ்ரீதரன், மு.பெ. கிரி எம்எல்ஏ, ப.கார்த்திக் வேல்மாறன், ப்ரியாவிஜய்ரங்கன் , தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் குட்டி புகழேந்தி , சு.ராஜாங்கம், வழக்கறிஞர் சீனிவாசன், விஜி (எ) விஜயராஜ், ஏ.ஏ.ஆறுமுகம், மெட்ராஸ் கே.சுப்ரமணி, மண்டி பிரகாஷ், பா.ஷெரிப், காலேஜ் கு.ரவி, மாட வீதி ஒருங்கிணைப்பாளர்கள் அருணை வெங்கட், இல.குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




