தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவானது நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சாரல் திருவிழாவிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் தற்போது முதலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சாரல் திருவிழாவிற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, குற்றாலத்தின் பல்வேறு பகுதிகள் குப்பை கூளங்களாக காட்சி அளித்த நிலையில், அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அங்கு உள்ள பேரூராட்சி அதிகாரிகளை அழைத்து கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
மேலும், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சொல்லும் சுற்றுலாத்தலமான குற்றாலத்தை எப்பொழுதுமே தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் செய்த நிலையில், சுற்றுலா பயணிகளும் கண்ட இடங்களில் குப்பைகளை போடாமல் அதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் குப்பைகளை போட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




