நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு, 4, 5ம் கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ. 103 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
நாமக்கல் மாநகராடசிக்கு உட்பட்ட, திருச்சி ரோடு பொன் விழா நகரில், ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் ரோடு மேம்பாட்டு பணிகள் துவக்க விழா நடைபெற்றது. எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார் எம்.பி., ரோடு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வெளியூர் பயணிகள் எளிதாக நாமக்கல் நகரை கடக்கவும், நாமக்கல் நகருக்கு புதிய அவுட்டர் ரிங் ரோடு அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றுவுடன், கடந்த 2022ம் ஆண்டு நாமக்கல் சேலம் ரோட்டில் இருந்து சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, மோகனூர் ரோடு வழியாக மதுரை பைபாஸ் ரோட்டில் இணைக்கும் சுமார் 20 கி.மீ. தூரம் அவுட்டர் ரிங் ரோடு அமைக்க உத்தரவிட்டார்.
இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 411 கோடி ஆகும், முதல் கட்டமாக சேலம் மெயின் ரோட்டில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து நடைபெறுகிறது.
2ம் கட்டமாக பேருந்து நிலையத்தில் இருந்து வேட்டாபம்பாடி வரை ரோடு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மரூர்ப்பட்டி அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
3ம் கட்டமாக வேட்டாம்பாடியில் இருந்து திருச்சி ரோட்டில் வேப்பனம் வரை ரோடு அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் 4ம் கட்டமாக திருச்சி ரோட்டில் இருந்து மோகனூர் ரோடு வரையும், 5ம் கட்டமாக மோகனூர் ரோட்டில் லத்துவாடியில் இருந்து, பரமத்தி ரோட்டில் தொட்டிப்பட்டி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பணியும் நடைபெற வேண்டியுள்ளது.
இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அனுமதி அளித்து, 10 கி.மீ. தூரம் உள்ள இந்த பணிக்கு ரூ. 103 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.




