Close
மார்ச் 7, 2026 1:41 மணி

மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை மற்றும் தீர்மானக் கூட்டம் முன்னாள் காவல் துறைத் தலைவர் கே.ஆர்.எம்.கிஷோர் குமார் தலைமையில் மதுரை நடனா திரையரங்கம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், சௌராஷ்ட்ர பிரமுகர்கள் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள உலகப் புகழ் பெற்ற திரைப்பட பாடகர் டி.எம்.சௌந்தர் ராஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களின் சௌராஷ்ட்ர முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கே.ஆர்.எம். கிஷோர் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

தமிழகத்தில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதிக மக்கள் உள்ள எங்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்கு தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தி முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறோம்.

எங்கள் சமூக பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கட்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க உள்ளோம். எங்கள் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களாக மதுரை, கும்பகோணம் ஈரோடு, தஞ்சாவூர், சேலம் பரமக்குடி ஆகியவை உள்ளன.

மதுரையில் எங்கள் சமூகத்தினரால் உருவாக்கபப்பட்ட சௌராஷ்ட்ர கூட்டுறவு வங்கி தேர்தலை எங்கள் சமூகத்தினரே நடத்துவதற்கு மாநில அரசு அனுமதிக்க வேண்டும்.

எங்களது சமூகத்தினரின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான கோரிக்கைகளுக்கு ஆதரவு பெறுவது தொடர்பாக எங்களது சமூகத்தைச் சேர்ந்த அனைவரிடம் ஆதரவு பெறும் மிஸ்டு கால் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 8955771115 என்ற நம்பர் தரப்பட்டுள்ளது.

வருகிற 2026-ம் ஆண்டு சட்டச சபை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் சௌராஷ்ட்ர பிரமுகர்கள் வசிக்கும் அனைத்து ஊர்களுக்கு சென்று எங்களது கருத்தை தெரிவித்து அவர்களது அதரவை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சௌராஷ்ட்ர பிரமுகர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மதுரையின் பிரபல மருத்துவர் பி.ஆர்.ஜே.கண்ணன், டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் சர்மிளா பிரகாஷ், தினேஷ் , குமரேசன், பிரபாகரன், ராமதாஸ் பிஆர்ஓ முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top