Close
மார்ச் 7, 2026 8:06 மணி

வாடிப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு பணிந்த அதிகாரிகள்

வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல் ஊன்றிய காவல்துறை அதிகாரியை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

வாடிப்பட்டி பேரூராட்சி ஏழாவது வார்டு ஜவஹர்லால் தெரு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையை காவல் துறையை சேர்ந்த ஒருவர் தனது இடம் என்று கூறி கம்பி வேலி அமைக்க முற்பட்டார். அதனை தடுத்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்த கோரி அவர்கள் கோஷமிட்டனர். ஆனால்  அதிகாரிகள் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது வருவாய்த்துறையினரிடம் கலந்து பேசி திங்கட்கிழமை முடிவு எடுக்க முடியும் என கூறி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனை ஏற்காத பொதுமக்கள் சிறிது நேரத்தில் மதுரை திண்டுக்கல் சாலையில் பழைய நீதிமன்றம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் , வாடிப்பட்டி இருந்து மதுரை சென்ற பேருந்துகள் அறைகளை விட்ட தூரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது

மேலும் அவசரத்திற்கு வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் மாற்று வழியை நாட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மேலும், உடனடியாக ஆக்கிரமித்து ஒன்றிய கல்லை அகற்றாவிட்டால், அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் . மேலும், பொது பாதையை ஆக்கிரமித்து ஊன்றிய கல்லை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனை ஏற்று மறியல் செய்தவர்கள் சாலை மறியலை கைவிட்டு உடனடியாக பொதுப் பாதையை திறந்து விட பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்ற வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஊன்றிய  கல்லை அகற்றினார்.

சுமார் 2 மணி நேர பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ஊன்றிய  கல் அகற்றப்பட்டதில் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து, அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் நீதிமன்ற உத்தரவு இருந்தும் இது போன்ற தவறுகள் நடப்பது வேதனையை தருவதாகவும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நீதிமன்ற உத்தரவு பெறுவதும் போராட்டம் நடத்துவதும் நடக்காத காரியம் ஆகையால் பொது பிரச்சனைகளில் அதிகாரிகள் தலையிட்டு சுமூக முடிவு எடுக்க உதவ வேண்டும் என, கூறிச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top