Close
மார்ச் 7, 2026 1:27 மணி

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்: திருவண்ணாமலையில் நூதன வழிபாடு

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு நடைபெற்றது.

பெரணமல்லூரை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் மகான் ஆறுமுக சுவாமி கோயிலில் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றதில், குழந்தை வரம் வேண்டி திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் குளக்கரையில் மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம்  பெரணமல்லூரை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் வாழ்ந்த மகான் ஆறுமுக சுவாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்து கொண்டு அருளாசி வழங்கி வந்தாா்.

இந்த நிலையில், வயது முதிா்ந்த தருவாயில் ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடையப்போவதாகக் கூறி வந்தாா். அந்த இடத்தில் கோயில் கட்டி ஆடி அமாவாசை நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதமிருந்து இங்கு வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் மடிப்பிச்சையாக பெற்று அருகில் உள்ள குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவா்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனக் கூறி ஜீவசமாதி அடைந்தாா்.

இதைத் தொடா்ந்து அந்த இடத்தில் பொதுமக்கள் கோயில் கட்டி வழிபட்டும், ஆடி அமாவாசை நாளில் குருபூஜையும் நடத்தி வருகின்றனா்.

தற்போது ஆடி மாதத்தையொட்டி, கடந்த 22-ஆம் தேதி காப்புக் கட்டி பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டு விழா தொடங்கியது. பின்னா், 23-ஆம் தேதி கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடி அமாவாசை தினமான வியாழக்கிழமை 189-ஆம் ஆண்டு ஆறுமுக சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10 மணிக்கு பக்தா்கள் வேண்டுதல் பொருட்டு காவடி எடுத்தனா். பின்னா் 11மணிக்கு மேல் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த திருமணமான பெண்கள் கோயில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் மடி ஏந்தி பிரசாதம் பெற்றனா்.

தொடா்ந்து பிரசாதம் பெற்ற பெண்கள் கோயில் அருகில் உள்ள குளக்கரைக்குச் சென்று பிரசாதத்தை வைத்து பயபக்தியுடன் சுவாமியை வேண்டி மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டனா்.

மேலும், இந்தக் கோயிலில் வேண்டுதல் நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம், சர்க்கரை, வெல்லம் உள்ளிட்டவற்றை வழங்கி காணிக்கையை செலுத்தினர். கோயிலில் நடக்கும் அன்னதானத்திற்கு தேவையான அரிசி மூட்டைகள், காய்கறிகள்  செலுத்தினா்.

இந்த மண் சோறு சாப்பிடும் வழிபாட்டில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top