Close
ஏப்ரல் 23, 2026 10:02 மணி

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய அலுவலகம்

வெறிச்சோடி கிடக்கும் வட்டாட்சியா் அலுவலகம்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மேற்கொண்ட 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது.

தமிழ்நாடு முழுவதும், வருவாய்த் துறை அலுவலர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்திட போதிய நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பிரிவு பணியிடங்களை உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், சான்றிதழ் மற்றும் அரசின் சிறப்புத்திட்ட பணிகளை மேற்கொள்ள வட்டங்கள் தோறும் புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்,

கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை மீண்டும் 25 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கிடையேயான ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்திட உரிய அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுக்க 14 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் இந்த போராட்டத்தின் காரணமாக வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் ரகுபதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஆரணி வட்ட கிளைத் தலைவா் தேவானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதன் காரணமாக ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.இதனால், பொதுமக்கள் தங்கள் மனுக்களை கொண்டு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top