Close
மார்ச் 7, 2026 4:26 மணி

பழமையான நடுகல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த ஆட்சியர்

பழமையான நடுக்கல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலையில் பழமையான நடுகல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட இம்மாவட்டத்தின் பழமையான நடுகல்லை திருவண்ணாமலை அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் உமாசங்கரிடம் ஒப்படைத்தார்.

தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரத்தில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு 5 வரிகளை உடையது. இக்கல்வெட்டு காலம், தமிழ் பிராமி (தமிழி) வரிவடிவத்திலிருந்து வட்டெழுத்து வரிவடிவத்திற்கு மாற்றம் அடையும் காலமான 4 அல்லது5 ஆம் நூற்றாண்டு இருக்கும் என கணிக்கப்பட்டு தொல்லியல் துறையின் ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நடுகல்லில் சங்க இலக்கியத்தில் ஆநிரை கவர்தலை வெட்சி என்றும், ஆநிரை மீட்டலை கரந்தை என்றும் வரையறுக்கிறது. அவ்வாறு ஆநிரை மீட்கும் பூசலில் ஈடுபட்டு இறந்த வீரனைப் பற்றி இந்நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கருங்காலி நல்லூரான் கண்ணந்தைகண் மகன் விண்ணன் பூசலில் பட்டான் என வீரனின் நினைவாக இந்நடுகல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தொன்மையான கற்சிலைகள் மற்றும் பொருட்களை பார்வையிட்டார்.

இந் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார். திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகனராமன், கீழ்பென்னாத்தூர் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top