Close
மார்ச் 7, 2026 1:04 மணி

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 13 வயது மாணவன்: பரிசுப் பணத்தை முதியோருக்காக அர்ப்பணித்த மனித நேயம்!

மனிதநேயமும் சமூக விழிப்புணர்வும் ஒன்றாகக் கலந்த உன்னத செயலால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவன் சக்திதரர், அனைவரின் மனங்களையும் வருடும் செயலில் ஈடுபட்டு பெருமை சேர்த்துள்ளார்.

மணிவாசகம் – சுதா என்ற ஆசிரிய தம்பதியர்களின் புதல்வரான சக்திதரர், மவுண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர், விருதுநகரில் தினத்தந்தி நாளிதழ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, மற்றும் வடமலையான் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டியில் பங்கேற்று, முதல் பரிசாக ரூ. 50,000 பெற்று  சாதனையைப் பெற்றார்.

“நாட்டுக்காக வாழ்ந்த காமராஜரைப் பற்றிப் பேசி பெற்ற பரிசு என்பதால், அது நாட்டுக்கே திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும்” என்ற உயர்ந்த எண்ணத்துடன், பெற்றோர்களின் ஒத்துழைப்புடன், நேயம் முதியோர் இல்லம் சார்ந்த 27 முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, மதிய உணவு ஏற்பாடு செய்தார்.

இளம் வயதிலேயே தொண்டு செயலுக்கு முன்னேறிய சக்திதரர், “வெற்றியை வலிமையாக அல்ல, வித்தாகக் கொண்டாடலாம்” என்பதற்கும், செயலே சாதனையின் மேன்மை என்பதற்கும் நேரடி எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

சக்திதரரின் இந்த நெஞ்சார்ந்த பணி, சமுதாயத்தில் நல்லிணக்கமும், அக்கறையும், பண்பாடும் இனியதொரு நிழலாக பரவி செல்கின்றது.

மாணவனின் சமூகப் பணிக்கு பாராட்டுகள் குவியும் நிலையில் – பெற்றோரின் ஊக்கம் மற்றும் நல்வழிகாட்டலும் பரவலான பாராட்டுக்கு உரியது.

– ஈரநெஞ்சம் அறக்கட்டளை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top