Close
மார்ச் 7, 2026 4:26 மணி

திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்: அமைச்சர் ஆய்வு

கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

திருவண்ணாமலை மாநகராட்சியில் 56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 22 அறைகளோடு 880 மாணவ மாணவிகள் தங்கும் அளவில் ஆய்வகங்கள், நூலகம், கணினி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளோடு புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளியை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

95 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ளபணிகள் விரைந்து முடிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை அவர் அதிகாரிகளுக்கு வழங்கினார். தமிழ்நாடு முதல்வரின் ஒப்புதலோடு விரைவில் அவரிடம் தேதி பெற்று இந்த மாதிரி பள்ளி கட்டடம் திறக்கப்படும் என்றார்.

அதனைத் தொடர்ந்து செங்கம்  ரோடு கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் திருக்கோயில் சார்பாக ரூ.64.30 கோடி மதிப்பீட்டில் 15.65 ஏக்கர் இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி அமையவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கிரிவலப்பாதையில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பனை அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒப்பனை அறைகளுக்கு தேவையான குடிநீர், வெளியேற்ற மின்விசிறி, மின் விளக்குகள், ஸ்டீல் கதவுகள், உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளோடு ஒப்பனை அறைகள் அமைக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அமைச்சர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமரிடம் நிதி அமைச்சர் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்.

பிரதமர் மோடி சோழர் பெருமைகளை பேசியதை தமிழனாக நான் வரவேற்கிறேன் . குறிப்பாக அவர் பேசும்பொழுது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று அழகுத் தமிழில் பெயரைக் கூறியது தமிழின் நளினத்தையும் அழகையும் வெளிப்படுத்தி இருக்கிறது. ஆனால் தொடர்ந்து அவரது பெருமைகளை அவர் இந்தியில் பேசும் பொழுது, இந்தி வார்த்தையை பற்றி நமக்கு தெரியும் என்றும் இந்தி வார்த்தைகள் கடுமையான உச்சரிப்பில் உள்ளதையும் சுட்டிக்காட்டி பேசிய அவர், முழுமையாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறும் மோடி தமிழில் பேசி இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கல்விக்காக வழங்க வேண்டிய தொகையை கொடுத்தால் தான் மோடி அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக எடுத்துக்கொள்ள முடியும்.

ஓரணியில் தமிழ்நாடு குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி கனவு காண்கிறார், ஒருவர் கனவு காண்பதை நாம் தடுக்க முடியாது, கனவு காண்பது என்பது தனிமனித சுதந்திரம் அவர்களது விருப்பம் என்று பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி செய்யும். என்று திட்டவட்டமாக கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாநில தடகளச்சங்கத்துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்பொறியாளர்கள் (பொ.ப) மணிவண்ணன், கௌதம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், வருவாய்கோட்ட அலுவலர் ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட துணை அமைப்பாளர் ப்ரியா விஜயரங்கன். மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top