பொரசப்பளையம் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைத்து, புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, பொரசப்பாளையம் கிராம பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் – திருச்செங்கோடு மெயின் ரோட்டில், மாநகராட்சிக்கு உட்பட்ட பொரசப்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை மண் முழுவதும் மழை நீரில் அடித்துசெல்லப்பட்டு ரோடு முழுவதும் கற்களாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது.
மேலும் குடிநீர் பைப் இணைப்புகள் கொடுப்பதற்காக நடு ரோட்டில் தேண்டப்பட்ட குழிகள் மிகப்பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் சேதமடைந்த ரோடுகளில் நடந்து செல்லவும் முடியாமல், வாகனங்களில் செல்லவும் முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
டூ வீலர்களில் செல்லும் பள்ளிக் குழந்தைகளும், பெண்களும் பல முறை விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர்வரும் மழைகாலங்களில் இந்த ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றால் மேலும் பாதிப்பு ஏற்படும்.
எனவே உடனடியாக பொரசப்பாளையம் பகுதிகளில் ரோடுகளை சீரமைத்து புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




