Close
மார்ச் 7, 2026 3:14 மணி

லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்படும் நவீன ஆவின் பால் பண்ணை: ஆட்சியர் ஆய்வு

லத்துவாடியில் கட்டப்பட்டு வரும், நவீன ஆவின் பால் பண்ணையை கலெக்டர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் அருகே லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன ஆவின் பால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, நவீன ஆவின் பால் பண்ணை, லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

கட்டிடப் பணிகளுக்கு ரூ.32.50 கோடி, இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 57.50 கோடி என ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கட்டிட பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

இயந்திரங்கள் 90 சதவீதம் கொள்முதல் செய்யப்பட்டு 40 சதவீதம் நிறுவப்பட்டுள்ளது. பால் பண்ணை அமைக்கும் பணி முழுமையாக நிறைவுசெய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் வருகிற நவம்பரில் மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்.

மேலும், 2026ம் ஆண்டு ஜனவரி முதல், நாமக்கல் ஆவின் மூலம் தயாரிக்கப்படும் பால் மற்றும் பால் உப பொருட்கள், மக்களின் பயன்பாட்டிற்கு சென்றடையும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய பால்பண்ணை பயன்பாட்டிற்கு வரும்போது, மாவட்டத்தில் உள்ள 15,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுமார் 4 லட்சம் நுகர்வோர் பயனடைவார்கள். மேலும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதோடு, சுமர் 1000 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

நவீன ஆவின் பால்பண்ணையை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் சண்முகம், துணைப் பதிவாளர் (பால்வளம்) சண்முகநதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top