திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 667 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் வரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தைவைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து வந்தவாசி வட்டம் , கீழ்வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மனைவி பாம்பு கடித்து இறந்த காரணத்தால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலை மற்றும் போளூர் வட்டம், மாம்பட்டு அஞ்சல் சாவடி தெருவை சேர்ந்த செல்வன் பேரரசு த/பெ. ஜெயபழனி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
தேசிய குடற்புழு நீக்க தினம்
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதிபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி அம்ருதா எஸ்.குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்யார்
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 61 மனுக்களும்,
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 50 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் செய்யார் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




