போதையில்லாத தமிழ்நாடு உருவாக்கிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியேற்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்,
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ம் தேதி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன் மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன், போதைப் பழக்கதிற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்கனை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமைமாகத் தருவேன், போதைப் பொருள்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளில் சிறந்த முறையில் செயலாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி முதலிடம் பெற்ற திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும், 2-ஆம் இடம் பெற்ற செய்யார் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு ரூ 10 ஆயிரம் பரிசுத்தொகையும், 3-ஆம் இடம் பெற்ற திருவண்ணாமலை சண்முகா இண்டஸ்ட்ரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 5 ஆயிரமும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது .
போதைப் பொருள் எதிர்ப்பு குழுக்கள் நன்முறையில் செயல்பட்டதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் முதலிடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்பள்ளிப்பட்டு ரூ.15 ஆயிரம் 2ஆம் இடம் அரசு மேல்நிலைப்பள்ளி குன்னத்தூர் ரூ. 10 ஆயிரம், 3-ஆம் இடம் அரசு மேல்நிலைப்பள்ளி தச்சம்பட்டு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
மேலும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவரும், மாவட்ட ஆட்சியரும் வழங்கினார்க ள் .
இந் நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உதவி ஆணையர் (கலால்) செந்தில் குமார், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.




