கல்லூரி மாணவியை காரில் அழைத்துச்சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்த, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனை நாமக்கல், அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்தவர் மோகன் (54), காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனர். தற்போது, நாமக்கல் நகரில், பரமத்தி ரோட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவர், கொல்லிமலை வாழவந்திநாடு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள காவலர்களுக்கு கொல்லிமலையை சேர்ந்த ஒருவர், சமையல் செய்து கொடுத்து வருகிறார். சமையலரின், 19 வயது மகள், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில், 2ஆம் ஆண்டு பி.எஸ்சி., படித்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த 6ம் தேதி, திண்டுக்கல் செல்வதற்காக புறப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை இருவரையும், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தனது காரில் அழைத்து வந்துள்ளார்.
அப்போது, முள்ளுக்குறிச்சியில் மாணவியின் தந்தை காரில் இருந்து இறங்கியுள்ளார். அதையடுத்து, மாணவியை மட்டும், காவல் உதவி ஆய்வாளர் மோகன் தனியாக அழைத்துக் கொண்டு காரில் வந்துள்ளார். அப்போது, அவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து, நாமக்கல்லில் காரில் இருந்து கீழே இறங்கிய மாணவி, பேருந்து பிடித்து திண்டுக்கல் சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்த கல்லூரி மாணவி, சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் வேதபிறவி, கொல்லிமலை சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலியே பயிரை மேய்ந்ததுபோல், பாதுகாப்பாக அழைத்துச் சென்று, பேருந்து நிலையத்தில் விட்டு வருவார் என நம்பி காரில் அனுப்பி வைத்த மாணவிக்கு, சிறப்பு காவல் ஆய்வாளர் மோகன் பாலியல் தொல்லை கொடுத்ததுள்ளது நாமக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




