திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து மாதந்தோறும் ஒரு வட்டத்தை தேர்வு செய்து பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு அவர்களின் வசிப்பிடத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அதன்படி, திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெரு, வடவீதி சுப்பிரமணியர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சி சார்பில் நடைபெறும் தூய்மைப் பணியை பார்வையிட்டார். அப்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தினமும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பகுதியில் பணிக்கு வருகின்றனரா என கேட்டறிந்தார்.
அதோடு, தூய்மைப் பணியாளர்களும் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும், கையுறை, முக கவசம் போன்றவற்றை அணித்து பாதுகாப்பாக பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.
வேங்கிக்கால் புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை குழந்தைகளோடு அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவு சுவைத்து தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கு கீழ் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் விவசாயிகளின் சொந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கடைகளில் பதிவேட்டினையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. அம்ருதா எஸ்.குமார், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு. மணி இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) பார்த்திபன். இணை இயக்குநர் (வேளாண்மை) கண்ணகி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பிரகாஷ், வட்டாட்சியர் மோகனராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரத்திவ்ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.




