திருவண்ணாமலை மாவட்டத்தில் 79 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, காவலர் அணி வகுப்பு மரியாதை ஏற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, மூவண்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டு சமாதானத்தை உணர்த்தும் வகையில் வெண்புறாக்களை வானில் பறக்க விட்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காவல்துறையினரின் அணிவகுப்பு பார்வையிட்டனர். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
தியாகிகளை கௌரப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் தியாகிகளுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். தொடர்ந்து தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக 224 பயனாளிகளுக்கு ரூபாய் 1,27,50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உட்பட மொத்தம் 298 பயனாளிகளுக்கு ரூபாய் 4,17,28,595 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
மேலும், துணை ஆட்சியர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், தமிழ்நாடு நில அளவைப்பதிவேடுகள் துறை, தேசிய தகவலியல் மையம், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவைகள் செய்தவர்கள் என 397 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த சமூக சேவைக்கான விருது
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த சமூக சேவைக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.




