உசிலம்பட்டியில், ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்ரகாளியம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி பகுதியான மேலப்புதூரில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பழம், இளநீர்,தயிர், தேன் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து , பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள், பூக்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வளையல் அலங்காரத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
இதில், ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு வளையல்கள் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம், யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், வைகை காலனி கிழக்கு சக்தி மாரியம்மன் ஆலயம், சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம், மதுரை ஜெ.ஜெ. நகர் சித்தி விநாயகர் ஆலயங்களில், ஆடி வெள்ளிக்
கிழமையை முன்னிட்டு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெற்றது.
கோயில் நிர்வாகம் சார்பில் , பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.




