நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதிகளில் கள்ளச்சாரம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் காவல் நிலைய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் மதுவிலக்குப் பிரிவு காவலர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர். பேளுக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழனியப்பர் கோவில் மலை அடிவார பகுதிகளிலும், மங்களபுரம் பகுதியில் உரம்பு கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், ஆயில்பட்டி மற்றும் கார்கூடல்பட்டி ஆகிய பகுதிகளில், ஏற்கனவே மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதை பற்றியும், அவர்களது மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
மேலும் பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் அருந்துவதால் உடல்நிலை பாதிப்பதுடன், மரணம் கூட ஏற்படக் கூடும் என்றும் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகள் பற்றியும் கள்ளச்சாராயம் விற்பது, காய்ச்சுவதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு அரசு அறிவித்துள்ள சன்மானம் பெற்றுத்தரப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் அனைத்து வகையான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக காவல்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டார்.




