பரமத்தி அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்த குருவியை பிடிக்க சென்ற 4-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (40), கார் டிரைவர். இவரது மகன் சஞ்சீவி (9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள நண்பர்களுடன் சஞ்சீவி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்றில் குருவி கூடு கட்டி இருந்தது. அந்த கூட்டில் இருக்கும் குருவியை பிடிக்கும் ஆர்வத்தில் டிரான்ஸ்பார்மர் மீது சஞ்சீவி ஏறியுள்ளார். எதிர்பாராத விதமாக மின்கம்பி மீது சஞ்சீவி மோதியுள்ளார். கண்ணிமைக்கும் தூக்கி வீசியப்பட்ட சஞ்சீவி அருகில் இருந்த மற்றொரு மின் கம்பியில் சிக்கிக் கொண்டார்.
தகவல் அறிந்து மின்சாரத்தை துண்டித்த மின்வாரியத்தினர் சிறுவனை மீட்டு ப.வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பரமத்தி வேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




