திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச் செம்மல் என்ற விருது ஏற்படுத்தப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்ச் செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithuraitn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு , நிழற்படம் 2, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி, வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்பு சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை நகலுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2 9.08.2025 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.




