பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகளை விட்டார். அப்போது அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்திற்கு 2025-2026-ம் ஆண்டிற்கு 4 லட்சம் மீன் குஞ்சுகள் காவிரி ஆற்றில் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேட்டூர் அணை அரசு மீன் பண்ணையிலிருந்து 1 லட்சம் மீன் குஞ்சுகள் மற்றும் கிருஷ்ணகிரி அணை அரசு மீன் பண்ணையிலிருந்து 3 லட்சம் மீன் குஞ்சுகள் வரவழைக்கப்பட்டு காவிரி ஆற்றில் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் அழிந்து வரும் நிலையிலுள்ள நாட்டின மீன்கள் பாதுகாப்படும்.
இதனை உற்பத்தி செய்வதன் மூலம் மீன் உற்பத்தி அதிகரிக்கப்படும். ஊரக பகுதி மக்களுக்கும் குறைந்த விலையில் புரதச்சத்து மிகுந்த மீன் உணவு கிடைக்கும். மேலும், ஆறுகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயும் கணிசமாக அதிகரிக்கும்.
ஆறுகளில் மீன்குஞ்சுகளை விடுவதன் மூலம் நிலையான மீன் உற்பத்தி மற்றும் பல்லுயிர் உற்பத்தி பாதுகாக்கப்படுவதோடு, மீன்களின் வாழ்விடம் சிதைவடைதலும் தடுக்கப்படுகிறது. மீனவர்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் சுற்றுச்சூழுல் அமைப்பும் பேணி பாதுகாக்கப்படும்.
மீனவர்கள் மீன்பிடிக்கும் நீர்த்தேக்கங்கள் மற்றம் ஆறுகளில் மீன்பிடிக்கும் போது பயன்படுத்தும் சிறிய வலை கண்ணியின் அளவு மற்றும் கொசுவலைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மீனவர்கள் சிறியரக மீன்குஞ்சுகள், சினைமீன்கள் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இது மீன் வளம் குன்றாமல் அதன் உற்பத்தியை அதிகரிக்கும்.
ஆறுகளில் வெடிவைத்து மீன்பிடித்தல், மீன்களில் வாழ்விடத்தை சிதைப்பது மட்டுமல்லாது மீன் உற்பத்தியை கணிசமாக குறைத்துவிடும். மீனவர்கள் தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். மீனவர்கள் தினசரி பிடிக்கும் மீன்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நவீன உயிர் மீன் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி, மேட்டூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் உமாகலைச்செல்வி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




