நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உதவி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர், அரசு பள்ளிக் கல்வி துறையின் பெரும் முயற்சிகளில் ஒன்றாக, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைப்பதற்காகவும், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில், நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், மேற்கொண்டுள்ள பணிகளை, மேலும் வலுப்படுத்தவும், திட்டமிடுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிஇஓ மகேஸ்வரி, பள்ளிக் கல்வி துறை திட்ட மேலாண் குழுவை சேர்ந்த லூக் அஸ்லாக்சன் உள்ளிட்டோர் பங்கேற்று, திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்தும், வரும் அக்டோபரில், சேலம் மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான மாநாடு குறித்தும் ஆலோசித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் இந்த பணியில், பெரு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பங்களிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.




