வெளிநாட்டு வாகன டயர்கள் இறக்குமதிக்கு, இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மல்லீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அவுட்டர் ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தரமற்ற சைனா டயர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு டயர்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும். இது உள்நாட்டில் டயர் உற்பத்திக்கு பாதுகாப்பாக அமையும்.
டயர் ரீட்ரேடிங் தொழில் வளர்ச்சிக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் உதவி அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க துணைத்தலைவர்கள் லோகேந்திரன், தர்மலிங்கம், இணை செயலாளர்கள் வெங்கடேஷ், ஹரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




