Close
மார்ச் 7, 2026 5:48 மணி

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு புதிய தரிசன வரிசை: அமைச்சர் ஆய்வு

அண்ணாமலையார் கோவில் முன்பு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகை தருவதால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆகவே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் அருகே கட்டணமில்லா தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்களுக்கு தரிசன வரிசை அமைப்பது அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை ரீதியிலான பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு க்யூ லைன் அமைப்பதற்கான இடங்களை அளந்து அதற்கான ஆலோசனைகளை அமைச்சர் வழங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆன்மீகப் பெருமக்கள் சுற்றுலாப் பயணிகள் என சனி. ஞாயிறு விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக ஆந்திரா. தெலுங்கானா. கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருகின்ற பக்தா்கள் எவ்வித சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் அரசு சாா்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக ராஜகோபுரம் எதிரில் உள்ள பகுதியில் இருந்து கட்டணமில்லாமல் பக்தா்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வரிசைகள் அமைக்கப்பட உள்ள பணிகள் குறித்து பொதுப்பணித் துறை தொழில்நுட்ப வல்லுநா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வடஒத்தவாடை தெருவில் காத்திருப்பு வரிசைகள் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிா்க்கப்படும். அது மட்டும் இன்றி உள்ளூர் பக்தர்கள் கட்டணமில்லாமல் நேரடியாக சாமி தரிசனம் செய்ய கியூ லைன் அமைப்பது குறித்தும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் பல்வேறு இடங்களில் கற்பூரம் ஏற்றப்படுவதை தடை விதிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் அதற்கு தடை விதிக்க முடியாது என குறிப்பிட்டு கற்பூரம் ஏற்றுவதற்காக தனியாக தற்காலிக ஸ்டீல் வடிவில் குண்டம் உருவாக்கப்படும் என தெரிவித்தார் .

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்,  மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையாளர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top