திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு இலவச தையற் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு 1000 மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு தூய்மை அருணை மேற்பார்வையாளர் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தார். முன்னாள் நகர மன்ற தலைவர் ஶ்ரீதரன், பன்னீர்செல்வம், ப்ரியா விஜயரங்கன், துணை மேயர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கார்த்திவேல்மாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு 1000 மகளிர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையற் பணிக்கான உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் உரையாற்றும்போது,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்கிறது குறள். அதாவது, அன்பும், பண்பும் நிறைந்திருப்பதே இல்வாழ்க்கை. அந்த இல்வாழ்க்கை இன்ப வாழ்வாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு பொருளாதாரம் அவசியம்.
இந்த பொருளாதார வாழ்க்கைக்காக பெண்கள் ஆசிரியர்களாக, அரசு ஊழியர்களாக பணியாற்றுகிறார்கள். ஏன், விமானத்தை இயக்கும் விமானிகளாக பணியாற்றுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், நாட்டைக் காக்கும் இராணுவத்திலும், காவல்துறையிலும், ஆணுக்கு நிகராக பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்த வாய்ப்பு கிடைக்காதவர்களுக்காக தையற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு குடும்பத் தலைவி தன் கையே தனக்குதவி என்று, வீட்டிலேயே தையல் இயந்திரம் வைத்து, பொருளாதாரத்தை ஈட்டுக்கிறார்கள்.
இளம் பெண்கள் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். நான் பொதுப்பணித்துறை அமைச்சர், எனது அலுவல் பணிக்காரணமாக திருப்பூர் மாநகரம் சென்றிருந்தேன். அங்கு இரண்டு இளம் பெண்கள் என்னிடம் வணக்கம் தெரிவித்து, அய்யா, எங்களை தெரிகிறதா என்று கேட்டார்கள். நான் தெரியவில்லை என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள், நாங்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள். நீங்கள் நடத்தும் தையற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதன் காரணமாக, நாங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளோம் என்றார்கள். இதைக் கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தேன்.
நான் தையற்பயிற்சி தொடங்கியதன் நோக்கம் நிறைவேறியதைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தேன். நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழியைத் தருகிறேன். தையற்பயிற்சி பள்ளி தொடர்ந்து நடக்கும்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், முத்துவிநாயகர் கோவில் தெருவில் உள்ளது. இங்கு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும், இலவச ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கப்படுகிறது.
மேலும், அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம் உள்ளது. அங்கு தனியாக தினசரி மற்றும் வார இதழ்கள் பொதுமக்கள் வாசிக்க தனி அரங்கம் உள்ளது. மேலும், இங்கு மாணவர்களுக்கு இணையதளத்தில் தேவையானவற்றை நகல் எடுத்து தரப்படுகிறது. பொது மக்கள் வழங்கும் மனுக்கள் என்னிடம் வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திருவண்ணாமலை பெரிய தெருவில், தளபதி கணினி மையம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தளபதி கணினி மையம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதேபோல், திருவண்ணாமலை பெரிய தெருவில், சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு இலவச தையற்பயிற்சி மையம் 2015 முதல் நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு காலையில் இரண்டு பிரிவு, பிற்பகல் இரண்டு பிரிவு என தையற் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 150 மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு முதல்வர் 3 ஆசிரியர்கள் தையற் பயிற்சி அளிக்கின்றனர்.
நான் எப்போதும் மக்களோடே இருப்பவன். அவர்களை என்னிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது, மேலும், என்னைப் பயன்படுத்தி மக்கள் தொண்டினை மேலும் ஆற்றிட கேட்டுக் கொள்கிறேன் என உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அருணகிரி நாதர் விழா குழு தலைவர் தனுசு, கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் மாதவ.சின்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மதிமுக சீனீ. கார்த்திகேயன், விடுதலை சிறுத்தைகள் நியூட்டன், வர்த்தகர் சங்கத்தின் மாநில உறுப்பினர்கள் சுப்பிரமணி, இராஜசேகர், கபிலன் மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக தையற் பயிற்சி முதல்வர் நிர்மலாகுமார் நன்றி கூறினார்.




